உணவு ஓர் மிகச் சிறந்த அருட்கொட



இந்த உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அந்த வகையில் மனிதன் உயிர் வாழ அவசியமான உணவு என்பது அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையான ஒன்றாகும். 

எந்தவொரு உயிரினமும் தமக்கு தேவையான உணவுகளை தாமே ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை.

இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான். 

அந்த வகையில் மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 டன்(3200 கிலோ) எடை அளவிலான மீன்களை தனது உணவாக உட்கொள்கிறது. அப்படியென்றால் எத்தனை கோடி உயரினங்களுக்கு அல்லாஹ் உணவளிக்கின்றான் என்று சிந்தித்தால் அல்லாஹ்வின் வல்லமையை எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 29:60)

அல்லாஹ் மனித வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தனது திருமறையின் மூலம் வழிகாட்டுவது போலவே “உணவு” குறித்தும் அதை எவ்வாறு தனது வல்லமையால் உற்பத்தி செய்கிறான் என்றும், நாம் எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும், எதை உண்ண வேண்டும், எதனை உண்ணக்கூடாது என ஒவ்வொன்றையும் நமது நலன் கருதி பாகுபடுத்தி திருமறையில் எராளமான வசனங்களில்  விவரிக்கின்றான்.

மேலும், மனிதனின் விருப்பத்தை அறிந்த அல்லாஹ் ஒரே விதமான உணவை ருசித்து சளித்து விடாமல் இருப்பதற்காக பல்வேறு உணவு வகைகளை பல சுவைகளில் ருசித்து இன்புற தானியங்களையும் கனிகளையும் படைத்திருப்பாதாக கூறுகிறான்.

وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْن

படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ் மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 6:141)



 وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ

பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்:13:4)



மனித சமுதாயத்தை படைத்த அல்லாஹ் மனிதன் ஒரே விதமான தாவர உணவை மட்டும் உண்ணாமல் இறைச்சியையும் உண்டு மகிழவும் அதை செரிக்கும் விதமாக உடல் அமைப்பைக் கொண்டும் மனிதனை படைத்துள்ளான்.

وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا‌ۚ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!

(அல்குர்ஆன்: 16:14)